தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி ரிலீஸ்: பலத்த பாதுகாப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கும் திரையரங்குகள்!!
கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படம் வெளியாகவுள்ள திரையரங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள ஸ்டோரி படம் வெளியீடு
சன் ஷைன் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று (மே 5) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கேரளாவில் உள்ள 32 ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்கள் கடத்தப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்த்து விடப்பட்டதாகவும் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இதற்கு கேரளா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது எனவும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்கெனவே உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.
மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை..! ஆளுநர் புகாரால் தலைமைச் செயலாளருக்கு திடீர் நோட்டீஸ்
தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்
எனவே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டிருந்தது. இந்திய இறையாண்மை, பொது அமைதி மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் மற்றும் கேரளா நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எந்த முடிவையும் எடுக்க முடியாது எனக்கூறி இந்த படத்தை தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் போதிய அளவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு
படம் பார்க்க வருவோரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 27 திரையரங்குகளில் இன்று படம் வெளியாகிறது. கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகிறது சென்னையில் 13 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் திரையரங்கில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்