கார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! உடல் நசுங்கி வாலிபர் ரத்தவெள்ளத்தில் பலி..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
நீலகிரியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(46). இவரது மகன் சஞ்சய்குமார்(26). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது நண்பர் ஒருவரின் திருமணம் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக சஞ்சய்குமார் திருநெல்வேலிக்கு ஒரு காரில் சென்றுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் தாமோதரன், மகாலட்சுமி ஆகியோரும் அதே காரில் சென்றனர். மகாலட்சுமி பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.
திருமணம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் காரில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை சஞ்சய் குமார் ஓட்டி வந்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் அதிகாலையில் கார் வந்த போது அதே சாலையின் எதிரே லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் நொறுங்கி சஞ்சய் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மற்ற இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஈடுபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவலர்கள் உயிரிழந்த சஞ்சய்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.