மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிருப்தி..!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்த விசாரணை கமிட்டி மீது போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியும் கூட. அவரை அந்த பதவியிலிருந்து நீக்கக்கோரியும், நடப்பு மல்யுத்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது தீர்வு எட்டப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிட்டியை அமைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதியளித்திருந்த நிலையில், மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டியை அமைத்தது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பேட்மிண்டன் வீராங்கனை த்ருப்தி முரிகுண்டே, முன்னாள் டாப்ஸ் சி.இ.ஓ ராஜகோபாலன், எஸ்.ஏ.ஐ நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை கமிட்டியை தங்களிடம் ஆலோசித்த பின்னரே அமைக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும், ஆனால் தங்களுடன் ஆலோசிக்காமலேயே மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் அதிருப்தியளித்துள்ளனர்.