சேமிக்க வேண்டியதெல்லாம் வீணாகிறதே... இது வெள்ளமா? ஓர் உரத்த சிந்தனை!
ஏரி, குளங்கள், நீர் ஓடைகள்,மறுகால் ஓடைகள், கால்வாய்கள்
இவையெல்லாம் முறையாக தூர் வார பணம் ஒதுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டதா?
மன்னர் ஆட்சி காலத்து இருந்த நீர் மேலாண்மை கடை பிடித்தா போதும் .இந்த பிரச்சனை குறித்து ஆட்சியாளர்கள் அறிந்து வைத்து, முறைப்படி செயல்படுத்தினார்களா?
ஏதோ மழை வரும் போது மட்டுமே பொங்குவது இல்லாமல் உருப்படியாக தொலைநோக்கு சிந்தனையை முன்னெடுப்போம்.
ஏரி, குளங்கள் பாதுகாப்பு, குடிமராமத்து, ஆயக்காட்டுதாரர்களின் நலன் குறித்தான எனது ரிட் மனுவில் சொல்லிய தமிழகத்தின் நீராதார விவரங்கள்,
நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும்,
ஏரிகள்
-> 39,202 மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-> 20,413 உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ளது.
சுமார் 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் இருந்தது
ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் ...
18,789 பொதுப்பணித்துறை ஏரிகள்,
29,484 கிளை வாய்க்கால்கள்,
86 ஆறுகள்,
200 அணைகள்
என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன.
ஏரி, குளங்கள், நீர் வரத்து ஓடைகள் , மறுகால் ஓடைகள் இவையெல்லாம் முறையாக தூர் வார பணம் ஒதுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டதா?
நீர் மேலாண்மை குறித்து ஆண்ட & ஆளுகிற ஆட்சியாளர்கள் அறிந்து வைத்து, முறைப்படி செயல்படுத்தினார்களா?
குடிமராமத்து திட்டம் என்றில்லை. ஏரிகளை மேம்படுத்த பிரதம மந்திரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழும் தமிழக அரசு ஏராளமான நிதியை பெற்றுள்ளது. அந்த திட்டத்தின்படி 2015 முதல் 2020 முடிய ஐந்தாண்டுகளக்கு ரூ. 50,000 கோடி தமிழகத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2015-16 நிதியாண்டில் ஆயக்காட்டுப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்காக ரூ. 201.58 கோடியும், ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ. 75 கோடி என்று இவ்வளவு பணமும் முழுமையாக முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
நிலத்தடி நீரையும் மழை நீரையும் சேகரிக்க தவறிவிட்டோம். அதற்கு அக்கறையும் காட்டவில்லை. நிலத்தடி நீரையும் பாதுகாக்கவில்லை. மழை நீரை சேகரிக்க கூடிய தடுப்பணைகளும் இல்லை.
அதற்கான மனப்பான்மையும் இல்லை. ஆனால் இயற்கையின் அருட்கொடைளான ஆறுகளை சுரண்டி மணலையும், மலைகளை உடைத்து எம்-சான்ட் (M-Sand) போன்றவற்றை தயாரிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவோ நாம் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லையே?
ஏதோ மழை வரும் போது மட்டுமே பொங்குவதும், ஆட்சியாளர்களின் இயலாமையை மடைமற்றும் வேலையை செய்யாமல் உருப்படியாக தொலைநோக்கு சிந்தனையை முன்னெடுப்போம்.
* கட்டுரையாளர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
(தி.மு.க., செய்தித் தொடர்பாளர்)