என் மீது நடவடிக்கையா..! சொந்த கருத்தைத்தான் சோன்னேன் - ஜகா வாங்கிய டிடிவி தரப்பு எம்.பி...!
தேர்தல் ஆணையத்தில் தனது சொந்த கருத்துக்களையே தெரிவித்ததாகவும் அதிமுக விதிகளை தான் மீறவில்லை எனவும் டிடிவி தரப்பு எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்ததுபோலவே, தினகரன் பின்னால் இருக்கும் எம்.பிக்களின் பதவிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தி தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க எடப்பாடி தரப்பு தயாராகிவருகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருவழியாக ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி தற்போது கட்சியையும் தங்கள் பக்கம் நிரந்தமாக தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதனிடையே டிடிவி தினகரன் தன்னிடம் இருந்த எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடிக்கு ஆட்டம் காண்பித்தார். ஆனால் எடப்பாடி அதிரடியாக டிடிவி பின்னால் இருந்த 18 பேரின் எம்.எல்.ஏக்கள் பதவியையும் காலி செய்தார்.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில், தினகரன் அணியினர் இரண்டு புகார் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றபோது, தினகரன் அணியைச் சேர்ந்த எம்.பி நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு டிடிவிக்கு ஆதரவாக பேசினார்.
இதனால் அடுத்தகட்டமாக எம்.எல்.ஏக்களை தூக்கியது போலவேதினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் மைத்ரேயன் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டியளித்த டிடிவி தரப்பு எம்.பி. நவநீதகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் தனது சொந்த கருத்துக்களையே தெரிவித்ததாகவும் அதிமுக விதிகளை தான் மீறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சொந்த கருத்துக்களை தெரிவிக்க அதிகாரம் உள்ளது எனவும் அதிமுகவுக்காக தொடர்ந்து செயலாற்றுவேன் எனவும் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் விசுவாசியாகவே தான் உள்ளதாகவும் அவரால் நியமிக்கப்பட்ட தன் மேல் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.