நகைக்கடைகளில் ரூ.48 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை “அதிரடி”
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.47.74 கோடி கறுப்பு பணம் சிக்கியது.
வருமான வரித்துறையினர் கர்நாடகா மற்றும் கோவா பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு, தங்க நகை வியாபாரிகள் உதவுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, பெங்களூரில் உள்ள, 7 நகைக் கடைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, கமிஷன் பெற்று கறுப்புப் பணத்தை வாங்கி, அதை விற்பனையில் கிடைத்த வருவாயாக அந்த கடைகள் கணக்கு காட்டியது தெரிய வந்தது.
தங்கம் வாங்கியவர்களின் பான் கார்டு விபரங்கள் தாக்கல் செய்யவில்லை. சிலர், நகைகளை ஏற்கனவே விற்றதாக முன் தேதியிட்டு கணக்கு காட்டியுள்ளனர். இந்த நகைக் கடைகளில் நடத்த சோதனையில், ரூ.47.74 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டாத பணம் சிக்கியது.
கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த, டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர், பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் பெற்று மாற்றித் தருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடத்திய அதிரடி சோதனையில், அவரிம் இமிருந்து ரூ.1.07 கோடி புதிய நோட்டுகள் உள்பட ரூ.1.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.