- Home
- உடல்நலம்
- உணவு
- elaneer nungu payasam: அடிக்கிற வெயிலுக்கு உடம்பை ஜில்லுன்னு ஆக்கும் இளநீர் நுங்கு பாயசம்...எப்படி செய்வது?
elaneer nungu payasam: அடிக்கிற வெயிலுக்கு உடம்பை ஜில்லுன்னு ஆக்கும் இளநீர் நுங்கு பாயசம்...எப்படி செய்வது?
கோடை உஷ்ணத்தை தணிக்க இளநீர், நுங்கு ஆகியவற்றை தனித்தனியாக சாப்பிடுவோம். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து இளநீர் நுங்கு பாயசம் செய்து குடித்து எவ்வளவு குளு குளுன்னு இருக்கும்? ஆரோக்கியம் நிறைந்த இந்த பாயசத்தை செய்வதற்கு இதோ ரெசிபி டிப்ஸ்...

இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர் நுங்கு பாயாசம்:
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சமயத்தில் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்வதற்கு ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான உணவுதான் இளநீர் நுங்கு பாயாசம். இது சுவையில் மட்டுமல்ல, உடலுக்கு குளிர்ச்சியையும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடியது.
தேவையான பொருட்கள்:
இளநீர் - 2 கப்
நுங்கு - 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு
பால் - 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் இளநீரை வெட்டி, அதிலுள்ள தண்ணீரை தனியே எடுத்துக் கொள்ளவும். பிறகு இளநீரின் சதையை எடுத்து இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
நுங்கின் தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து பின்னர் குளிர வைக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள இளநீர் கலவையுடன், குளிர்ந்த பாலை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை பாயாசத்தில் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான இளநீர் நுங்கு பாயாசம் தயார்.
இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைத்து பரிமாறினால், கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.
கூடுதல் தகவல்கள்:
இந்த பாயாசத்தில் நீங்கள் விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
சிலர் தேங்காய்ப்பால் சேர்த்தும் இந்த பாயாசத்தை செய்வார்கள். அதுவும் நல்ல சுவையாக இருக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பதாக இருந்தால், பாயாசம் முழுமையாக தயாரான பிறகு, பரிமாறுவதற்கு சற்று முன்பு சேர்க்கவும்.
நுங்கு இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. இது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து, நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.
இளநீரில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது கோடை காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க உதவுகிறது.