Vadivelu: பவதாரிணி இறந்த செய்தியை கேட்டு நொறுங்கிவிட்டேன்! கண்ணீர் ததும்ப.. கதறியபடி இரங்கல் தெரிவித்த வடிவேலு
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளான, பவதாரிணி மரணம் குறித்து வைகைப்புயல் வடிவேலு கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.
பல தமிழ் நெஞ்சங்களை தன்னுடைய இசையால் கொள்ளை கொண்டவர் இசைஞானி இளையராஜா. இவருடைய மகன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஆகிய இருவருமே இசை துறையில் பணியாற்றி வருகின்றனர். கார்த்திக் ராஜா, இளையராஜாவுக்கு உதவியாளராக இருந்து கொண்டே... ஒரு சில படங்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். ஆனால் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணியும் இசை துறையில் கவனம் செலுத்தி வந்தார். குழந்தையாக இருக்கும்போதே மலையாளத்தில் வெளியான 'மைடியர் குட்டிச்சாத்தான்' படத்தில் ஒரு பாடலை பாடிய இவர், பின்னர் 'ராசையா' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக மாறினார். இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள பவதாரிணி, 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Singer bhavatharini
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக பவதாரிணி உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் இவருக்கு கல்லீரல் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பவதாரணி இயற்கை முறையில் கேன்சருக்கான சிகிச்சை பெற இலங்கைக்கு சென்றார். மேலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, ஆகியோரும் பவதாரிணி உடன் இருந்தனர். இளையராஜாவின் இசை கச்சேரியும், இலங்கையில் 28ஆம் தேதி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
Bhavatharani Raja
ஆனால் சிகிச்சை பெற துவங்குவதற்கு முன்பாகவே, பவதாரணிக்கு மூச்சு திணறல் ஈற்பட்டு நேற்று மாலை 5:30-மணி அளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் முதல், பல பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என பவதாரிணி மறைவுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Bhavatharini Songs
இலங்கையில் இருந்து, இன்று மாலை பவதாரிணியின் உடல்... சென்னை வந்தடையும் என்றும், மாலை 6 மணி அளவில் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்க வைக்கப்படும் என்கிற தகவல் வெளியானது.
Vadivelu
இந்நிலையில் பவதாரிணியின் மரணம் குறித்து அறிந்து மிகவும் நொறுங்கிப் போனதாக பிரபல காமெடி நடிகர் வடிவேலு ஆடியோ மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவில் வடிவேலு பேசி உள்ளதாவது.. "பவதாரிணி மரண செய்தியை கேட்டு, நொறுங்கிப் போய்விட்டேன். அந்த குழந்தை சாதாரண குழந்தை அல்ல. அவருடைய குரல் குயில் போல இருக்கும், என உருக்கமாக கூறியுள்ளார் வடிவேலு.
'மாரிசன்' படப்பிடிப்பில் இருந்து வந்ததுமே இந்த செய்தி தன்னை நிலைகுலைய செய்து விட்டதாகவும், பவதாரிணியின் இறப்பு செய்தியை கேட்ட பின்னர் ஒன்றுமே புரியவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார். 47 வயசு தான் ஆகுது.. இது சாகுற வயசா? இவ்வளவு சீக்கிரம் கடவுள் அந்த குழந்தையை அழைத்து கொண்டார், என குரல் கம்மி பேசியுள்ள வடிவேலு பவதாரிணியின் மறைவு செய்தியை கேட்டு ஒட்டுமொத்த தமிழர்களுமே நொறுங்கிப் போய் விட்டதாகவும், தைப்பூச நாளில் அந்த குழந்தை முருகப்பெருமானின் காலடியில் இளைப்பாறுவார் என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய தன்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்பசாமி, சிவன் போன்ற தெய்வங்களை வேண்டுவதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.