ஈரக்குலையை நடுங்க வைத்த கோர விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி.! 2 பேர் படுகாயம்.!
சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.