ஆடுஜீவிதம் படத்தில் ஆட்டுடன் செக்ஸ் வைக்கும் காட்சி எடுக்கப்பட்டதா? இயக்குனர் பிளெஸ்ஸி ஓபன் டாக்..
ஆடுஜீவிதம் படத்தின் சர்ச்சை காட்சி குறித்து இயக்குனர் பிளெஸ்ஸி விளக்கமளித்துள்ளார்.
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆடு ஜீவிதம். பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் உழைப்புக்கு பின் கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்ச்ககர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் இதுவரை 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்லும் நிலையில், அங்கு பாலைவனத்தில் ஆடுகளுடன் வாழ நேரிடுகிறது. அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்கள் அதிலிருந்து தப்பி நஜீப் மீண்டும் நாடு திரும்பினார் என்பதே படத்தின் கதை.
ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்பும் அவரின் கடின உழைப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிருத்விராஜ் தனது அசாதாரண நடிப்பின் மூலம் நஜீப்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி ஆடுஜீவிதம் பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அதாவது ஆடு ஜீவிதம் படத்தில் நஜீப் ஆட்டுடன் உடலுறவு வைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. காரணம், நாவலில், கதாநாயகன் நஜீப் மனிதத்தன்மையை இழந்து ஒரு ஆட்டுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று பென்யாமின் எழுதி இருப்பார். இது அந்தநாவலின் மிகவும் சர்ச்சைக்குரிய புள்ளிகளில் ஒன்றாகும், மேலும் இது கேரள பல்கலைக்கழகங்களில் படிப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால் நஜீப்பின் வாழ்க்கையின் இந்த அம்சத்தை பிளெஸ்ஸி தனது எவ்வாறு படத்தில் எப்படி கையாண்டார் என்பதைப் பார்க்க புத்தகத்தின் வாசகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அந்த காட்சியை படத்தில் காட்டுவதை பிளெஸ்ஸி தவிர்த்துவிட்டார்.
ஆடு ஜீவிதம் நாவலை எழுதிய பென்யாமின் இதுகுறித்து பேசிய போது, இயக்குனர் பிளெஸ்ஸி அந்தக் சர்ச்சைக்குரிய காட்சியை படமாக்கியதாகவும், ஆனால் தணிக்கைச் சிக்கல்கள் காரணமாக அதை நீக்கியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் பிளெஸ்ஸி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். "இது தேவையில்லாத சர்ச்சை. யாராவது வேண்டுமென்றே இந்த வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. பார்வையாளர்கள் இதுபோன்ற வதந்திகளில் இருந்து விலகி இருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பென்யாமின் எழுதிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்குவதற்கு பத்து படங்கள் தேவைப்படும் என்பதால் நாவலில் இருந்து 43 பக்கங்களை மட்டுமே எடுத்தேன். நாவலில் எழுத்தாளர் (பென்யாமின்) நஜீப்பை சித்தரித்தது வேறு. நஜீப் மீதான என் பார்வை வேறு... நான் அந்த காட்சியை பல வழிகளில் படமாக்கியிருக்கலாம், ஆனால் நான் நஜீப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு அவருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படாதா? புத்தகத்தில் உள்ள நஜீப் குற்ற உணர்வு இல்லாமல் இருக்கலாம், ஆனால் என் நஜீப் அப்படி இல்லை," என்று தெரிவித்தார்..
மேலும் “ ஆட்டுடன் உடலுறவு வைப்பது போன்ற எந்த ஒரு காட்சியும் படமாக்கப்படவில்லை. அதை சென்சார் போர்டும் நீக்கப்படவில்லை. இதுபோன்ற காட்சிகள் தொடர்பாக நிறைய விவாதம் இருந்தது. ஆனால் என் நஜீப் இதுபோன்ற செயல்களை செய்யமாட்டார் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆடுஜீவிதம் புரோமோஷன் நிகழ்வின் போது பேசிய பென்யாமின், அந்த சர்ச்சைக்குரிய காட்சி உண்மையில் படமாக்கப்பட்டது, ஆனால் தணிக்கை வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது என்று கூறினார். நாங்கள் அதை திரைக்கதையில் எழுதி அதை படமாக்கியுள்ளோம். அந்த காட்சிதான் அந்த படத்தின் ஆத்மா. ஆனால், சென்சார் போர்டுக்கு அது தெரியாது, இல்லையா?" என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த காட்சி தொடர்பான சர்ச்சை எழுந்தது. எனினும் தற்போது இயக்குனர் பிளெஸ்ஸி தனது விளக்கத்தின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.