Music Director Death: 28 வயதே ஆகும் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகினர்!
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திரையுலகில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும், அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடுவது இல்லை. அப்படி தான், பல சவால்களை கடந்து தமிழ் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர் பிரவீன் குமார்.
இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள, பிரவீன் குமாரின் இசை தனித்துவமாக பார்க்கப்பட்டது. சில பிரபலங்கள் பிரவீன் குமார் இசை துறையில் அசைக்கமுடியாத இடத்தை பிடிப்பார் என பாராட்டியதும் உண்டு. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலை 6:30 மணியளவில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலம் குன்றியதன் காரணமாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதை தொடர்ந்து நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணமடைந்தார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்த எந்தகவலும் வெளியாகவில்லை.
இவரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து இன்று 02:05: 2024 மாலை 6 மணியளவில் வடக்கு வாசல் அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது. 28 வயதிலேயே திறமையான இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தீரா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.