"சிறுவயதில் இருந்தே நான் சமைத்து வருகிறேன். பலர் எனது சமையலைப் பாராட்டியுள்ளனர். ஆனால் மோடி என் உணவை ஏற்றுக்கொள்வாரா? அவர் என்னை நம்புவாரா? அவர் விரும்புவதை நான் சமைப்பேன்" என மம்தா பானர்ஜி கூறினார்.

மோடிக்கு மாட்டிறைச்சி சமைத்துத் தருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது அரசியல் நாடகம் என்றும், பிரதமரை சிக்க வைப்பதற்கான தந்திரம் என்றும் பாஜக கூறியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது நவராத்திரி விரத நாட்களில் பொரித்த மீன் சாப்பிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மோடியின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் விரும்பினால் அவருக்கு மாட்டிறைச்சி சமைக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் தான் சமைக்கும் உணவைச் சாப்பிடுவாரா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

"சிறுவயதில் இருந்தே நான் சமைத்து வருகிறேன். பலர் எனது சமையலைப் பாராட்டியுள்ளனர். ஆனால் மோடி என் உணவை ஏற்றுக்கொள்வாரா? அவர் என்னை நம்புவாரா? அவர் விரும்புவதை நான் சமைப்பேன்" என்றார்.

"நான் தோக்லா போன்ற சைவ உணவுகள் மற்றும் மச்சர் ஜோல் (மீன் கறி) போன்ற அசைவ உணவுகள் இரண்டையும் விரும்புகிறேன். வெவ்வேறு சமூகங்கள் மற்றும் இந்துக்களில் பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியான சடங்குகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் உள்ளன. இதை திணிக்க பாஜக யார்? ஒரு தனிநபரின் உணவுப் பழக்கவழக்கங்கள் மீது ஆணையிடும் பாஜகவுக்கு, இந்தியா மீதும் அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களைப் பற்றியும் சிறிதளவும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது" எனவும் மம்தா சாட்டையடி பதில் கொடுத்தார்.

மம்தாவுக்கு பதில் கூறியுள்ள முன்னாள் மாநில பாஜக தலைவர் ததாகதா ராய், பிரதமருக்கு தானே சமைத்துக் கொடுப்பதாக மம்தா கூறியது நல்ல திட்டம் என்று தெரிவித்தார். "ஆனால் அதற்கு முன், அவர் ஏன் முதலில் தனது லெப்டினன்ட் ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு பன்றி இறைச்சியை வழங்கவில்லை?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர் சங்குதேப் பாண்டா, மோடி சைவ உணவு உண்பவர் என்பதை நன்கு அறிந்த மம்தா பானர்ஜி வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுக்கிறார் என்று சொல்கிறார்.