கன்னட நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் அவரின் மேலாளர் சடலம் மீட்பு! கொலையா? மர்மம் உள்ளதாக குடும்பத்தினர் புகார்
கன்னட நடிகர் தர்ஷினின் பண்ணையின் மேலாளராக வேலை செய்து வந்த ஸ்ரீதர் என்பவர் திடீர் என தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல்லில் உள்ள தர்ஷனின் துர்கா பண்ணையின் மேலாளராக இருப்பவர் ஸ்ரீதர். இவர் நேற்று காலை 11 மணியளவில் தர்ஷனின் பண்ணை வீட்டில் இறந்த நிலையில் கிடைத்தார். இவரின் அருகே ஒரு எலி மருந்து பாட்டில் கிடந்ததால், அதனை குடித்தே ஸ்ரீதார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ஸ்ரீதரின் தற்கொலைக் குறிப்பும், தற்கொலைக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீடியோவும் வெளியானது. அந்த தற்கொலைக் கடிதத்தில், கையெழுத்து போடாமல் விரலில் மை பதிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீதரின் தற்கொலைக்கு காரணம் 39 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. அதே போல் அவர் வெளியிட்ட வீடியோவில் கொலை வழக்கின் விசாரணை நடந்து வருவதால், தனது குடும்பத்தினரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறி இருந்தார்.
Darshan Farmhouse manager
ஆனால் ஸ்ரீதரின் குடும்பத்தினர், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை கிடையாது. கொலை செய்து விட்டு இதை தற்கொலை போல் ஜோடித்துள்ளனர். இந்த மரணத்தில் மர்மம் மறைந்துள்ளதாகவும் அதை கண்டுபிடிக்க வேண்டும் என, குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில்.. தற்போது போலீசார் இதை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து ஆனேக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஸ்ரீதர் தற்கொலைக்கும், ரேணுகா ஸ்வாமி கொலை வழக்குக்கும் தர்ஷனுக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்திலும் இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட நடிகரின் வழக்கு என்பதால் இந்த விவகாரம் பூதகரமாகி உள்ளது. கன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான திவ்யா ஸ்பந்தனா, கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகியோர் இந்த வழக்கில் பார பட்சம் இன்றி, தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.