ரஜினி - கமலை விட விஜய் எவ்வளவோ மேல்! ஆனால் இது யாருக்கு எதிரான அரசியல்? ப்ளூ சட்டை போட்ட நச் பதிவு!
தளபதி விஜய் இன்று தன்னுடைய கட்சியின் பெயரை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அரசியல் வருகையை உறுதி செய்துள்ள நிலையில், விஜய்யுடன் ரஜினி மற்றும் கமலை ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது விஜய் ரசிகர்கள் மன்றத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சமூக சேவைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இவை அனைத்தும் அரசியல் நோக்கத்தோடு செய்யப்படுவதாக பரவலாக பேச்சு அடிபட்டு வந்த போதிலும், தளபதி இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hncpz3nxpsszd5hjka00wtn3/thumb-38--1-_300x399xt.jpg)
ஆனால் தன்னுடைய ரசிகர்கள் மூலம், அரசியல் கட்சியை பலப்படுத்தி வந்ததோடு... அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாலை நேர பாடசாலை, நூலகம், போன்ற பயன் உள்ள உதவிகளை செய்து வந்தார். விஜய்யின் இந்த தொலைநோக்கு பார்வையுடன் கூடிய உதவிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து இன்று தளபதி விஜயின் கட்சியின் பெயரை... டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார். தளபதியின் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே தளபதி ரசிகர்கள்... சமூக வலைத்தளத்திலும், நேரடியாகவும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விஜய் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து... பிரபல சினிமா விமர்சகருடம், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில்... கூறியுள்ளதாவது, "ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.
யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும். என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.