அதர்வா - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் முக்கிய பணிகள் துவக்கம்!
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகளை பூஜையுடன் துவங்கியுள்ளது படக்குழு.
ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘டிஎன்ஏ’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா முரளி பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாகவும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் இருக்கிறார். நிமிஷா சஜயன் தனது யதார்த்தமான மற்றும் அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'பர்ஹானா', 'மான்ஸ்டர்' மற்றும் 'ஒரு நாள் கூத்து' போன்ற சிறந்த படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த மூன்று அற்புதமான ஆளுமைகளும் 'டிஎன்ஏ' படத்திற்கு ஒன்றிணைந்துள்ளது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தை ஆகஸ்ட் 2024 இல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விரைவில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு DNA படத்துடன் சேர்ந்து அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று ஆகிய 4 படங்கள் உருவாகியுள்ளது. எனவே இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது என் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.