செஸ் ஒலிம்பியாடை தொடர்ந்து சென்னையில் மகளிர் டென்னிஸ் ஓபன்..! இந்தியாவின் விளையாட்டு மையமாகும் சென்னை
செஸ் ஒலிம்பியாடை தொடர்ந்து சென்னையில் மகளிர் டென்னிஸ் ஓபன் தொடர் வரும் 12 முதல் 18 வரை நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தபின்னர், விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப்பணி, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது என விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சென்னையை இந்தியாவின் விளையாட்டு மையமாக உருவாக்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அந்தவகையில் தான், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாடை நடத்த கிடைத்த வாய்ப்பை, சென்னையில் நடத்த அனுமதி பெற்று, சர்வதேசமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் செஸ் ஒலிம்பியாடை நடத்தி முடித்தது தமிழ்நாடு அரசு.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை
சென்னையில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாடை கண்டு உலகளவிலிருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் எல்லாம் பிரமித்துவிட்டனர். செஸ் ஒலிம்பியாடில் ஆடவந்த சர்வதேச வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு அரசு தங்கவைத்து, உபசரித்த விதமும், செஸ் ஒலிம்பியாடை நடத்த செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் சர்வதேசத்தையே சென்னையை திரும்பி பார்க்கவைத்தது.
இந்நிலையில், அடுத்ததாக அதேபோன்றதொரு சர்வதேச தொடர் சென்னையில் நடக்கவுள்ளது. மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் தொடர் வரும் 12 முதல் 18 வரை சென்னையில் நடக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடக்கிறது.
சர்வதேச அளவில் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகள் பலரும் கலந்துகொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரையும் செஸ் ஒலிம்பியாடை போலவே வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
இதையும் படிங்க - சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் ஃபின்ச் ஓய்வு
சென்னை ஓபன் டென்னிஸில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.2 கோடியே 38 ஆயிரம் பரிசாக வழங்கப்படவுள்ளது. சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க ரூ.850, ரூ.1700, ரூ.2550 என்ற விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. chennaiopenwta.in என்ற இணையத்திலும் டிக்கெட்டை பெறலாம்.