நீட் தேர்விலிருந்து தமிழகம் தப்பிக்குமா? - மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்…
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ படிப்பகளுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்த தமிழக அமைச்சர்கள் நீர் தேர்வு குறித்து தமிழ சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரகாஷ் ஜவடேகரிடம் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.