இருக்குற பிரச்னைல இவங்க வேற.. தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!
நாகை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஓகி புயலால் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர். மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை ஆகியவை இணைந்து ஈடுபட்டுள்ளன.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் ஏற்கனவே மீனவ குடும்பங்கள் தவித்து வருகின்றன. கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இப்படி ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்டு மீனவர்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்துள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் என மொத்தம் 20 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பருத்தித்துறை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் அனைவரையும் காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.