மதுரையை பாராம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் ! நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. பேச்சு !!
இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும் , மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய மதுரையை பாராம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவையில் பேசினார். அப்போது, மதுரை தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம்.
உலகில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு வாழும் நகரம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகள் 20 கிலோமீட்டர் சுற்றளவில், 12 இடங்களில் கிடைக்கிற உலகின் ஒரே நகரம்.
இந்த நகரம் இந்திய பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தை பெற்றதோடு, மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கி இருக்கிறது.
அண்மையில் மதுரைக்கு அருகே கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களும், தொன்மை நாகரிகத்தின் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன.