காவிரி: மத்திய அரசு காலத்தை வீணாக்கி வருகிறது! நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணாக்கி வருவதாகவும், விரைவில் மேலாண் வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தமிழக திரையுலக சேர்ந்தவர்கள் மௌன போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள, போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணாக்குகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண் வாரியம் தொடர்பாக உறுதியாக கூறியுள்ளார்கள். ஆனால் மத்திய அரசாங்கம், மேலாண் வாரியம் அமைக்காமல் காலத்தை வீணாக்குகிறது என்றார். அனைத்து தமிழக மக்களின் கோரிக்கை; தமிழக மக்களின் நியாயமான கோரிக்கை.
அனைத்து தமிழக மக்களின் ஒரே குரல்; வலுவான குரல்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது. காவிரி மேலாண் வாரியம் விரைவில் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்றார்.