Aarumugasamy Commission - DMK Petition

மறைந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில், டாக்டர் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை என்றும், விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்ம இருப்பதாக எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் கூறி வந்தனர்.

ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 

சென்னை, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்கு, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வந்த நீதிபதி ஆறுமுகசாமி தனது பணிகளைத் தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள், நவம்பர் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர், நீதிபதி ஆறுமுகசாமியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக கூறியுள்ளார். 

மேலும், விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் லிஸ்டில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெற வேண்டும். ஆனால் 28 கைரேகைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அப்போலோ செய்தி குறிப்புக்கும், மருத்துவ அறிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளதாகவும் சரவணன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.