ஊறவைத்த 5 பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 விதமான ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
பாதாமை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடும் பழக்கம் பல வீடுகளில் உள்ளது. ஆனாலும் இன்னும் பல பெற்றோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. உண்மையில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கவும், உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது. நாள்தோறும் ஊறவைத்த 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்திலேயே உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உங்களால் காண முடியும். ஊற வைத்து உண்பதால் அதன் சுவை மாறுவதோடு செரிமானத்திற்கு எளிமையாகவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாகவும் இருக்கும். இந்தப் பதிவில் ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.
பாதாம் பருப்பு காலையில் உண்பது மனதை இலகுவாக்கிறது. உற்சாகமாக நாளை தொடங்க உதவுகிறது. நீங்கள் பாதாமை ஊற வைக்காமல் பச்சையாக சாப்பிடும் போது வயிற்றில் கனமான உணர்வு ஏற்படலாம். ஊற வைத்து உண்ணும்போது அதில் உள்ள பழுப்பு நிறத்தோலில் இருக்கும் சேர்மானங்கள் குறைகிறது. இவை செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கக் கூடியவை. ஊறவைத்து தோலை நீக்கி உண்பதால் இந்த அசௌரியங்களை, வயிற்று வீக்கத்தையும் தடுக்க முடியும்.
பாதாம் பருப்பு உண்பதால் உடனடியாக ஆற்றல் அதிகமாகும். பாதாம் பருப்பில் உள்ள நல்ல கொழுப்புகள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நாள் முழுக்க நிரம்பிய உணர்வையும், ஆற்றலையும் வழங்குகிறது. ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மதியம் ஏற்படும் மந்தநிலையைக் குறைக்கிறது.
சரும பளபளப்பிற்கு தேவையான வைட்டமின் ஈ பாதாமில் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு, சூரிய ஒளியால் சரும செல்கள் பாதிக்காமல் தடுக்கிறது. ஒரு மாதம் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால் சருமம் உள்ளிருந்து ஊட்டமளிக்கப்பட்டு மென்மையாக மாறும்; நீரற்றமாக இருக்கும்.
பாதாம் பருப்பு மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் காணப்படும் ரிபோஃப்ளேவின், எல்-கார்னைடைன் ஆகியவை மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதை உண்பதால் நினைவாற்றல் பெரிய அளவில் மாறாவிட்டாலும், தினசரி சாப்பிடுவது நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் நாளடைவில் படிப்பில் கூர்மையான கவனம், மனதெளிவு ஆகியவை கிடைக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுடைய மூளை ஆரோக்கியம் மேம்படும்.
கொழுப்பைக் குறைக்க பாதாம் பருப்பு உதவுகிறது. இதை அளவாக சாப்பிடும்போது நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்
பாதாம் பொதுவாக அதிக கலோரிகளை கொண்டிருந்தாலும், தினமும் குறைந்த பட்சமாக ஐந்து ஊறவைத்த பாதாம்கள் எடுத்துக் கொள்வது வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்படும். எடை குறைக்க நினைப்பவர்கள் தேவையற்ற பசியை கட்டுப்படுத்த தினமும் காலையில் ஊற வைத்த 5 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம். இதில் உள்ள புரதம், நார்ச்சத்து போன்றவை நாள் முழுவதும் அதிகமாக உண்பதில் இருந்து அவர்களை தடுக்கும்.
பாதாம் பருப்பில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான சில தாதுக்கள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை குறிப்பிட்ட அளவில் பாதாம் பருப்பில் காணப்படுவதால் நீங்கள் தினசரி அதை எடுத்துக் கொள்ளும் போது உங்களுடைய எலும்புகளையும் பற்களையும் உறுதியாக வைத்திருக்க அவை உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதாம் நல்ல ஆதாரம். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு, நல்ல கொழுப்புகள், மெக்னீசியம் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சாப்பிட்ட பின்னர் சர்க்கரை நோயாளிகள் நாள்தோறும் சிறிதளவு பாதம்களை உண்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். மருத்துவ ஆலோசனையை பெறும்போது இது குறித்து கேட்டுக் கொள்வது நல்லது.
பாதாம் பருப்புகளில் கணிசமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஊறவைத்த பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ மாதிரியான ஆக்ஸிஜனேற்றிகள் நம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பாதாமை தொடர்ந்து உண்ணும்போது அதில் உள்ள பாலிபினால்கள் மூட்டு வலி அல்லது இதய நோய் ஆகிய நோய்களுடன் சம்பந்தப்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவலாம் சொல்லப்படுகிறது.
