நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு...
நீட் தேர்வு முடிவு வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியை சேர்ந்த மாணவி தொடுத்த வழக்கில் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இதில் எந்த வகையிலும் மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடக்கூடாது என பல்வேறு முறையில் சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுப்பப்பட்டனர்.
இதில் மாணவ மாணவிகள் பெரிதும் மன இன்னலுக்கு ஆளாகினர். இதையடுத்து நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாணவர்கள் பலர் நீதிமன்றங்களை நாடி நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க கோரி மனு அளித்து வருகின்றனர்.
அதன் படி திருச்சியை சேர்ந்த மலர்விழி என்ற மாணவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வு முடிவுக்கு தடை கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கொண்டு தேர்வு நடக்கவில்லை எனவும், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை தெரிவித்திருந்தார்.
மேலும், மருத்துவ மாணவர்களை தேர்வு செய்வதில் நீட் ஒரே அளவீடாக அமையாது எனவும், நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பொதுவான வினாத்தாள் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீட் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிபிஎஸ்இ, மருத்துவ கவுன்சில் ஜூன் 7 க்குள் இதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.