மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மரணம்...
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவியும் தற்போதய சூப்பர்ஸ்டார்களான சிவராஜ்குமார் மற்றும் புனித் குமாரின் தாயாருமான பர்வதம்மா ராஜ்குமார் பெங்களூரில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா உடல் நலம் குன்றிய நிலையில் பெங்களூரு MS ராமையா மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு நேற்றிலிருந்து உடல் நிலை மோசமடைந்தது. தீவிரஸ் சிகிச்சை பிரிவில் இருந்தார் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணியளவில் பர்வதம்மா மரணமடைந்தார்.
பர்வதம்மா தனது கண்களைத் தானம் செய்துள்ளார் என்பதால் அவரது கண்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவரது கணவர் மறைந்த ராஜ்குமாரின் கண்களும் கூட தானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட மக்கள் மத்தியில் ராஜ்குமாரைப் போலவே பர்வதம்மாவுக்கும் செல்வாக்கு அதிகம். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக பர்வதம்மாவின் உடல் பார்வைக்கு வைக்கப்படவிருக்கிறது. பர்வதம்மாவின் மறைவைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பர்வதம்மா திரைப்பட தயாரிப்பளாகவும் இருந்துள்ளார் இவர் 80 படங்களுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். தனது பட நிறுவனம் மூலமாகவே தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரையும் ஹீரோக்களாக்கியவர்.
பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூர், மைசூரில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகா முழுவதும் இன்று திரைப்படத் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பர்வதம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உடல் சதாசிவம் நகரில் உள்ள மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பர்வதம்மாவின் உடல் காண்டீரவா ஸ்டேடியத்தில் கணவர் ராஜ்குமார் நினைவிடத்திற்கு அருகிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.