நாளை பொது விடுமுறையா?அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சொன்ன பரபரப்பு தகவல்.!
மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கும் நிலையில் பொதுமக்கள் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் காரணமாக முன்னெச்சரிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் இன்று மாலை முதல் நாளை மாலை வரை வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் நலன்கருதி முடிவெடுக்க வேண்டும். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், மழையோடு பலத்த காற்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 162 முகாம்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்த குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, 140 கால்நடை உயிரிழப்புகளுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 52 குடிசை பாதிக்கப்பட்டுள்ளது அதற்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.