இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை? இரண்டு முக்கிய இடங்களில் வசூலில் கோட்டை விட்ட 'ஜவான்'!
ஜவான் திரைப்படம் உலக அளவில் வசூலில் மிரட்டி வந்தாலும், இரண்டு முக்கிய இடங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பட குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை இயக்கினார்.
மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் அட்லீ இடம்பிடித்த நிலையில், அடுத்து யாரை வைத்து இயக்குவார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், திடீரென பிரபல பாலிவுட் நடிகர், ஷாருக்கானை வைத்து இயக்குவதை உறுதி செய்தார்.
நடிகர் தனுஷ், சிம்பு, உட்பட நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்..! திரையுலகில் பரபரப்பு..!
மேலும் இந்த படத்தை இயக்குவதற்குள் பல தடைகள் ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா பிரச்சினை காரணமாக இரண்டு வருடங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்ட நிலையில், பின்னர் ஷாருக்கானின் சொந்த பிரச்சினை காரணமாகவும் 'ஜவான்' பட படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டது. ஒரு வழியாக பல தடைகளை தாண்டி ஜவான் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தார் அட்லீ.
இந்த திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி, உலக முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி, திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்தின் மூலம், பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜவான் படம் வெளியாகி, வட இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான வரவேற்பு உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக வெளியான ஒரே வாரத்தில் ஜவான் திரைப்படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து வசூலில் பல்வேறு சாதனைகளை ஜவான் நிகழ்த்தி வரும் நிலையில், இரண்டு முக்கிய இடங்களில் இப்படம் தோல்வி அடைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இதுவரை ஜவான் போட்ட பணத்தை கூட எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கேரளாவில் இப்படம் தோல்வியை உறுதி செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 32 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும், இன்னும் நான்கு கோடி வசூல் செய்தால் மட்டுமே ஜவான் தமிழகத்தில் நஷ்டம் அடைவதை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த தகவல் பட குழுவினரை சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.