Jagannath rath yatra 2022 : பூரி ஜெகநாதரின் கண்கள் பெரிதாக இருக்க காரணம் இதுவா? வியக்க வைக்கும் மர்மங்கள் !
Jagannath rath yatra 2022 : உலகிலேயே வேறு எந்த கோவிலிலும் இல்லாத படி, இந்த பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் நிறைய மரத்தாலான சிலைகள் இருக்கின்றன. உலகிலேயே இதுபோன்ற அமைப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பூரி ஜெகநாத் கோயிலின் கருவறையில் மரத்தால் ஆன மூலவர் சிலைகள் உள்ளன. உலகிலேயே ஒரே கோயில் இதுதான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூன்று சிலைகளும் முறையான வழிபாடுகளுடன், புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. மற்ற கோவில்களில் இல்லாத அதிசயங்கள் இந்த கோவிலில் தினம் தோறும் நடந்து வருகிறது.
நம் தஞ்சை பெரிய கோவிலில் குறிப்பிடத்தக்க அதிசயம் கோபுர நிழல் கீழே விழாமல் இருப்பது தான். அதை சோழர் கால கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம் பார்க்கிறோம். இந்த கோவிலும் அதே சிறப்பை கொண்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் நவகலே பரா என்ற பெயரில் மிக பிரமாண்டமாக திருவிழா நடத்தப்படும். அதில் ஒவ்வொரு திருவிழாவின் போது, இந்த மூலவர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று போல மாற்றிவிட்டார்கள்.
கடவுள் விஷ்ணு காலையில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு இங்கு வருவதாக நம்பிக்கை. அதனால் இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு, வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி, இருபது லட்சமானாலும் சரி, சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணாவதும் இல்லை என்கிறார்கள்.
சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது, கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக் கேட்காது. ஆனால், அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது, கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குக் கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
இந்த கோவிலின் கருவறையில் ஸ்ரீ கிருஷ்ணர், சுபத்ரா மற்றும் பலபத்ரா (பல்ராம்) சிலைகள் அமர்ந்துள்ளன. மாதா சுபத்ரா தனது தாய் மாமா துவாரகாவை மிகவும் நேசித்ததாக கூறப்படுகிறது, எனவே அவரது விருப்பத்தை நிறைவேற்ற, ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா ஜி ஆகியோர் தனித்தனி ரதங்களில் துவாரகாவிற்கு பயணம் செய்தனர். அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் பூரியில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
ஆன்மீக பரவசத்தின் காரணமாக கிருஷ்ணரின் கண்கள் பெரிதாகி, கைகளும் கால்களும் அவரது உடலில் உறிஞ்சப்பட்டன என்றும், கிருஷ்ணரின் இந்த வடிவம் ஜெகந்நாதர் என்றும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். எனவே, கிருஷ்ணர் ஆழ்நிலை உணர்ச்சிகளின் மிக உயர்ந்த வடிவத்தை வெளிப்படுத்தும்போது கிருஷ்ணர் பகவான் ஜெகந்நாதர் என்று அழைக்கப்படுகிறார்.