Ilakkiya Serial: இலக்கியா சீரியலில் இருந்து விலக காரணம் இது தான்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஹீமா பிந்து..!
இலக்கியா சீரியலில் இருந்து, நடிகை ஹீமா பிந்து விலகிய நிலையில் முதல் முறையாக ஏன் விலகினேன் என்கிற காரணத்தை கூறி, ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில், கடந்த 2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நெடுதொடர் இலக்கியா, திங்கள் முதல் சனி வரை, தினமும் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரை தற்போது, ஸ்டாலின் இனியன் என்பவர் இயக்கி வருகிறார்.
ஹீமா பிந்து இலக்கியா என்கிற மெயின் லீடாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, சித்தி தொடரில் ஹீரோவாக நடித்து பிரபலமான நந்தன் லோகநாதன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், ரூபா ஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஸ் குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சுமார் 350 எபிசோடுகளை கடந்து, ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், ஹீமா பிந்து இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. மேலும் இவருக்கு பதில், பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சாம்பவி நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் ரசிகர்கள் பலர், ஹீமா பிந்துவிடம் 'இலக்கியா' தொடரை விட்டு விலகியது ஏன் என்கிற கேள்வியை முன் வைத்து வந்த நிலையில்... தற்போது அதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில், ஹீமா பிந்து போட்டுள்ள பதிவில், "என்னுடன் நடிக்கும் சக நடிகர்ளுக்கும், ரசிகர்களுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளேன். 'இலக்கியா' தொடரிலிருந்து விலகுவது நான் கனத்த இதயத்துடன் எடுத்த முடிவு. என்னுடைய இந்த முடிவு யாரையாவது காயப்படுத்தி இருந்தாலோ, உங்களை கவலையாக உணர வைத்திருந்தாலோ... என்ன மன்னித்து விடுங்கள். என்னுடைய எல்லைக்கப்பாற்பட்ட பல்வேறு காரணிகளாலும் செயல்களாலும் நான் கடினமான சூழலில் உள்ளேன்.
என்னால் ஒரே நேரத்தில் சின்னத்திரை தொடரையும், சினிமாவையும் சமாளிக்க முடியவில்லை. என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது சிரமத்தையே கொடுக்கிறது. என்னால், இந்தத்தொடரில் இனிமேலும் பிரச்னைகள் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலக்கியாவின் இப்போதைய வெற்றிக்கு நானும் ஒரு பங்காய் இருக்கிறேன் என்பதில் மனம் மகிழ்ச்சியடைகிறது. உங்களுடைய வரவேற்பே இதற்கு காரணம். எனக்கு கொடுத்த அன்பையும் ஆதரவையும் அடுத்துவருபவருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். இந்த முடிவில் என்னுடன் நிற்கும் அனைவருக்கும் என் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.