அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தேனி, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிமையான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட இந்தத 8 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.