திராவிட மாடல் அரசின் சாதனை என்ன தெரியுமா? பொள்ளாச்சியில் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த கமல்ஹாசன்!
டெல்லியில் போராடச் சென்ற விவசாயிகளை சீனாவில் இருந்து ஊடுருவ வந்தவர்களைப் போல ஆணி படுக்கை போட்டு தடுத்தார்கள் மத்திய அரசு மீது கமல்ஹாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வர சாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய போது, “தமிழகத்தில் 4 கோடி தென்னை மரங்கள் உள்ளது.
இதில் 2 கோடி தென்னை மரங்கள் பொள்ளாச்சி பகுதியில் உள்ளது. இந்த தென்னை விவசாயிகளின் நலன் கருதி நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்து, சுமைகளை பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தியது கலைஞர் அரசு. விவசாயிகளுக்கு 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தது கலைஞர் அரசு.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தயவு செய்து யாரும் திராவிட மாடல் என கிண்டல் செய்யாதீர்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் இலவச மின் இணைப்பு இவையெல்லாம் இதுவரை செய்தவை இன்னும் செய்யக்கூடிய திட்டங்கள் நிறைய உள்ளது.
இந்தப் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு என்று எதையும் செய்யவில்லை. மாறாக விவசாயிகள் டெல்லிக்கு சென்று குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்று போராட்டம் நடத்த சென்றார்கள். ஆனால் சீனாவில் இருந்து ஊடுருவு வந்தவர்களை எப்படி தடுப்பார்களோ அதுபோல இங்கிருந்து சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை போட்டு தடுத்தார்கள். எனவே எந்த அரசு வேண்டுமோ? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என பேசினார்.