கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதை அடுத்து எப்போது இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆகையால் வரும் பொங்கல் தினத்தன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் புத்தாண்டுக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 30 திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசு பேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 2,310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 1 லட்சம் பயணிகள் பயன்பெறுவர். இங்கு 4 உணவகங்கள் 100 அமைக்கப்பட்டுள்ளன. 12 இடங்களில் குடிநீர் வசதி, 540 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதள் தளத்தில் 260 கார்கள், 568 பைக்குகளும், இரண்டாவது தளத்தில் 84 கார்களும், 2230 பைக்குகளும் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.
செல்போன் சார்ஜிங் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. அவசர சிகிச்சை மையமும், மருந்தகமும், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எஸ்கலேட்டர் வசதியும், அதிக பாரத்தை கொண்டு செல்ல லிப்ட் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர் - நடத்துநர் ஓய்வறைகளும் இடம்பெற்றுள்ளன.