வெட்கக்கேடு! த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை... மக்களுக்காக களத்தில் இறங்கிய பார்த்திபனின் உருக்கமான பதிவு!
மிக்ஜாம் புயலால், பாதிக்கப்பட்டு... தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கியுள்ள பார்த்திபன், மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சென்னையில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டுள்ளது மிச்ஜாம் புயல். இடைவிடாத பெய்த 2 நாள் மழையால்.. சென்னையில் உள்ள ஏரிகள், ஆறுகள் நிரம்பியது மட்டும் இன்றி ஊருக்குள்ளும், வீட்டுக்குள்ளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மார்பளவு தண்ணீர் உள்ளதால், மக்கள் பலர் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். உணவுகள், தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அரசும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் தங்களால் முடிந்த வரை மக்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
ஆனால், பெரும்பாலான இடங்களுக்கு போட் மூலம் சென்றால் மட்டுமே மக்களுக்கு உணவு மற்றும் உடைமைகள் வழங்க முடியும் என்கிற நிலை உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகரும்... இயக்குனருமான பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், குட்டி யானை மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களோடு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை வழங்கி உள்ளார்.
மேலும் இது குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் பார்த்திபன் போட்டுள்ளார். அதில் "வெட்கக்கேடு! த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை... இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம். அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது. நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன். எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம், அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்… வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!' என பதிவித்துள்ளார்".
இந்த பதிவும், மக்களை சந்தித்து பார்த்திபன் உணவு வழங்கிய புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. நாளைய தினம் மக்களுக்கு தேவையான உணவுகளுடன் பார்த்திபன் படகில் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D