ஆன்லைன் ரம்மி, சீட்டாட்டம் குறித்து படமே எடுத்தேன்: ராஜ்கிரண் பதிவு!
ஆன்லைன் ரம்மி மற்றும் சீட்டாட்டம் குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்த அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை விரைவில் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி மற்றும் சீட்டாட்டம் குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சீட்டாட்டத்தினால் தெருவிற்கு வந்தவர்கள் ஏராளம். அது மிகவும் மோசமானது. இதனால், ஏற்படும் போதையும், வெறியும் அந்த பழக்கத்தை தொட்டவர்களை கடைசி வரையிலும் விடாது.
சீட்டாட்டம் விளையாடுவதற்கு தேவைப்படும் பணத்திற்காக எந்தவித எல்லைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் நான் எல்லாமே என் ராசா தான் என்ற படத்தையே எடுத்தேன். சீட்டாடுவது சட்டப்படி குற்றம். மீறி சீட்டாடினால் காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டங்களில் சீட்டாட்டம் என்பது டிஜிட்டம் மயமாகிவிட்டது. ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீட்டாடுகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதடுக்க, தமிழக அரசு சட்டம் இயற்றியும் அதற்கு ஆளுநரிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இட்ஸ் அவதார் தினம்: நடிகர் தனுஷ் டுவீட்!