Watch : அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.4 லட்சம் மோசடி! முன்னாள் அமைச்சர் செம்மலை உறவினர் மீது புகார்!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலையின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பாதிக்கப்பட்ட நபர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 

Share this Video

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே செம்மாண்டப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். மேச்சேரி அருகே செம்மாண்டப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர், தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு மைத்துனன் எனக் கூறி 4 லட்சம் ரூபாய் பணத்தை தன்னிடம் கொடுத்தால் உடனடியாக கால்நடை உதவியாளர் பணியை வாங்கி கொடுகிறேன் எனக் கூறி பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அரசு பணி வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து குமார் கேட்டபோது, தான் பெற்ற பணத்திற்கு பதிலாக செம்மாண்டப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதுநாள் வரை பணத்தையோ, நிலத்தையோ அவர் கொடுக்காததால் குமார் மீண்டும் மீண்டும் அவரை சந்தித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் குமாரை ஜாதியின் பெயரை குறிப்பிட்டு திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குமார் இன்றைய தினம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததோடு, ஜாதியின் பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்த வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Related Video