ஆதித்யா எல்1 விண்கலத்தின் முக்கிய கருவிகளை உருவாக்க இந்திய வானியற்பியல் நிறுவனம் மட்டுமின்றி பல சிறிய ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒருங்கிணைந்துள்ளன.

சூரியனை ஆய்வு செய்ய 1.5 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலத்தை ஏவுவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இத்திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) பிற மதிப்புமிக்க நிறுவனங்களின் உதவியையும் பெற்றுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐந்தாண்டுகள் சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்த விண்கலம் பூமியின் தொடக்கத்தைப் பற்றிய புதிய தகவல்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டது.

“ஆதித்யா-எல்1 திட்டம் 15 லட்சம் கிலோமீட்டர் தூர பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஒரு கட்டத்தை அடைந்த பிறகு, 7 கருவிகளின் உதவியுடன், அடுத்த 5 ஆண்டுகளில் சூரியனை ஆய்வு செய்யப் போகிறது" என்று கோள்கள் சங்கத்தின் இயக்குநர் ரகுநந்தன் குமார் கூறுகிறார்.

நான் ரெடி தான்... சூரியனை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்!

செப்டம்பர் 2ஆம் தேதி சூரியனை நோக்கிய இந்தியாவின் முதல் பயணம் தொடங்க உள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் L1 லாக்ரேஞ்ச் புள்ளியில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்தப் புள்ளியில் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருப்பதால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதனால்தான் இந்த இடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.

சூரியனைப் பற்றிய முக்கியமான தரவுகளைச் சேகரிக்கவும் படம் பிடிக்கவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் அமைப்புகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ளன. இதில் முக்கிய கருவியை பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானியற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics) வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (SAC / ISRO) இயக்குனர் நிலேஷ் தேசாய் கூறுகையில், "இந்த பணியின் முக்கிய ஆய்வுக் கருவி இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது தவிர பிற சிறிய நிறுவனங்களும் மேலும் ஆறு கருவிகளைத் தயாரிக்க உதவியுள்ளன. இதுவே இந்த விண்வெளித் திட்டத்தின் தனித்துவமான அம்சம்" என்று தெரிவித்துள்ளார்.

சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கி.மீ. பயணிக்கும் ஆதித்யா எல்1! என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

ஆதித்யா எல்1 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட L1 புள்ளியை அடைய சுமார் நான்கு மாதங்கள் அல்லது 125 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விண்கலம் சூரியனைப் பற்றிய ஆய்வைத் தொடங்கும்.

விண்கலத்தில் உள்ள கருவிகள், சூரியனின் காந்தப்புலம், அதன் வெளிப்புற அடுக்கு, சூரியனின் கரோனா மற்றும் சூரிய உமிழ்வுகள் பற்றி பரந்த அளவிலான தரவுகளை வழங்கும்.

ஆதித்யா-எல்1 திட்டம் குறித்து இஸ்ரோ புதன்கிழமை வெளியிட்ட தகவலில், விண்கலத்தை ஏவுவதற்கான ராக்கெட் சோதனை உள்ளிட்ட பிற ஒத்திகைகள் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்? இதற்கு முன் மிக அருகில் சென்று ஆய்வு செய்தது யார்?