கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது, உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காரணமாக விஜய் சென்னை திரும்பியது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் கரூருக்கு சென்று முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்த படி அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அப்படி இருந்த போதிலும் கரூருக்கு சென்று விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காததும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினர் சொகுசு பேருந்து மூலம் நேற்று மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
முன்னதாக ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் மோகன் (19) கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மோகனின் தந்தையை தவெகவினர் அழைத்து வராத நிலையில் அவர் தனியாக மகாபலிபுரம் வந்துள்ளார். அப்போது கந்தசாமியை ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சென்னை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜயை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு என் மனைவி, உறவினர்களை அழைத்து வந்துள்ளார்கள். பெத்த அப்பனான என்னை கூட்டிக்கொண்டு வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல என்னை அனுமதிக்கவில்லை. கட்சிக்காரர்கள் சொன்னால்தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள் என்றார்.
பின்னர் ஹோட்டல் வாசலில் காத்திருந்ததை தொடர்ந்து அவர் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு அவரை அனுமதித்தனர். இதுதொடர்பாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது உள்ளே அனுமதிக்கவில்லை என கூறும் கந்தசாமி என்ற நபரும் உயிரிழந்த மோகனின் தாயாரும் பல ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்கின்றனர். உயிரிழந்த மோகன் அவரது தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தவெக வழங்கிய ரூ.20 லட்சம் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தாயார் மட்டும் ஆறுதல் தெரிவிக்கும், நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
