தமிழகத்தில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதி உள்ளிட நிதிகளை தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு வழிகள் வாயிலாக இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முயல்வதாகவும் திமுகவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தி எதிர்ப்பு மசோதா
இந்நிலையில், தமிழகத்தில் இந்தி திணிப்பை தடுக்கும் வகையில் ஒரு மசோதாவை தமிழக அரசு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த மசோதா மூலம் தமிழகத்தில் இரு மொழி கொள்கையே இருக்கும் என்றும் இந்தி மொழி முற்றிலுமாக தடை செய்யப்படும் எனவும் தகவல் பரவி வந்தது.
தமிழக அரசு விளக்கம்
கரூர் விவகாரம், கிட்னி மோசடி விவாகரம் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பிப்பதற்காக திமுக அரசு இந்தி எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்து இருப்பதாக பலரும் குற்றச்சாட்டி இருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) தெரிவித்துள்ளது.
முற்றிலும் வதந்தி
இது தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே.
"அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை " என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்'' என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


