டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆவணங்களுடன் ஆஜராக தயார் - அண்ணாமலை பேட்டி
டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராக தயாராக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட வீடியோ உரையானது, மாநில முதல்வருக்கான வரம்பை மீறியதாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின், முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அவரின் பதவிக்கு உகந்ததாக இல்லை. மிரட்டினால் பாஜகவினர் அஞ்சிவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. தமிழகத்தில் பாஜக முன்பிருந்த நிலையில் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.
தனது மருமகனுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள ஒருவரை முதல்வரின் மருமகன் சென்று சந்திருப்பது எப்படி? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.
சென்னை மெட்ரோவில் 2009-2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.200கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பாஜக ஏற்கனவே மத்திய புலனாய்வு பிரிவில், புகார் அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணையை தொடங்கினால், முதலமைச்சர் மீது கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். அதற்கு அஞ்சியே, தமிழகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு, விசாரணை மேற்கொள்ளும் அனுமதியை முதலமைச்சர் ரத்து செய்துள்ளார். டி.ஆர். பாலு தொடர்ந்த வழக்கில் வரும், ஜூலை 14-ம் தேதி, ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக உள்ளேன்.” என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு? - என்ன காரணம்?