Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது தவறு செய்யவில்லை என முதல்வரால் கூற முடியுமா? - வானதி சீனிவாசன் கேள்வி!

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா? என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Can the Chief Minister say that Senthil Balaji did nothing wrong when he was a minister? - Vanathi Srinivasan Question!
Author
First Published Jun 15, 2023, 9:14 PM IST

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் பாஜக கட்சி நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக தேசிய தலைமை முடிவு செய்தபடி ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெகுஜன தொடர்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் பற்றி மத்திய அரசின் திட்ட பயனாளிகளை சந்திப்பது அவர்களுடன் கலந்துரையாடுவது கட்சி நிர்வாகிகளோடு தனித்தனியாக சந்திப்பு என இந்த மாதம் முழுவதும் பாஜகவினர் நாடு முழுவதும் பிஸியாக உள்ளனர்.

கோவையை பொருத்தவரை தனித்து நின்ற போதும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாஜக பெற்றிருந்தது. பாஜக-விற்கென இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போதும் கூட சட்டப்பேரவையில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை கோவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்று வந்திருக்கக்கூடிய முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் சரி போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி அவர்களை எப்படி கட்சி பணிகள் தீவிரமாக ஈடுபடுத்துவது அவர்கள் பகுதியில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கை எப்படி மேம்படுத்துவது?. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு அவர்கள் வெற்றி பெறுவதற்கு எந்த மாதிரியான மோடி அரசின் திட்டங்களை எடுத்துச் செல்வது என்பதை பற்றி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும்.

நெல்லையில் கமிஷன் வாங்கி கல்லா கட்டும் மேயர்; சர்ச்சை போஸ்டரால் திமுகவில் சலசலப்பு

தமிழகத்தின் சூழல் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா தற்போது வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், செந்தில் பாலாஜியை முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல் நிலை காரணமாக தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த கைதுக்கும் விசாரணைக்கும் மாநில அரசை நடத்துபவர்கள் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பாஜகவை பிரதமரை இதற்கெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி தான் காரணம் என்கின்ற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது பணிய வைக்க முடியாது எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை. அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா? செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?என கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம். மக்கள் நம்பப் போவதில்லை என்றார்.

அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி! திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா செந்தில் பாலாஜி? பாஜக


அண்மை காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது என பாஜக கூறிக் கொண்டே வருகிறது. அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி தற்போது ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்த பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும். குற்றம் செய்பவர்களின் மாமன் மச்சான் மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது. தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்றம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios