திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தியவர் கைது; 100 கிலோ அரிசி பிடிபட்டது...
திருவள்ளூர்
திருவள்ளூரில், ஆந்திராவுக்கு 100 கிலோ ரேசன் அரிசி கடத்திய ஆந்திராவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டை காவலாளர்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என்ற இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவலாளர்கள் அம்மையார்குப்பம் கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மட்டவளம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இராகவநாயுடு குப்பம் அருகே சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காவலாளர்கள் வழிமறித்தனர். பின்னர், அந்த வாகனத்தை காவலாளர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் 100 கிலோ ரேசன் அரிசி இருப்பதும், அது ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதும் தெரிந்தது.
காவலாளர்கள், அரிசியுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பங்காரு செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசரெட்டி (34) என்பவரை கைது செய்தனர்.
பின்னர், கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.