பொங்கலுக்கு வர முடியல... வீடியோ கான்பிரசிங்ல வரேன்... செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திறந்து வைக்கும் பிரதமர்
சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
இதனிடையே கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரையில் நடைபெற இருந்த 'மோடி பொங்கல்' விழா ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசின் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக ரத்து செய்வதாக கூறினார்.
இந்நிலையில், சென்னையின் பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வரும் 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். காணொலியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.