அரசு மருத்துவர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை; 52 சவரன் நகைகள், ரூ.1 இலட்சம் ரொக்கம் திருட்டு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 52 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரூ.1 இலட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ளது வல்லம் சாந்தி நகர். இங்கு கார்த்திகேயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
இவர் சனிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
அப்ப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 52 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ. 1 இலட்சம் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், காவலாளர்கள் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.