கோவை மாணவி தற்கொலை ; தடயவியல் சோதனை நடத்த போலீசார் முடிவு
கோவையில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை, கோட்டைமேட்டைச் சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அங்கு பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, அந்த மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மாணவி அப்பள்ளியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு முன் வேறு பள்ளியில் சேர்ந்தார். மூன்று நாட்களுக்கு முன் மாணவி, அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவில் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர். பள்ளி முதல்வரான கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த மீரா ஜாக்சன் என்பவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.
இச்சூழலில், மாணவி எழுதியதாக கூறப்படும் சிறிய பேப்பர் ஒன்று கண்டறியப்பட்டது. அதில் மிதுன் சக்ரவர்த்தி உட்பட மூவர் குறித்த குறிப்புகள் உள்ளன. அதனுடன் மாணவி கைப்பட எழுதிய ஒருகடிதமும் உள்ளது. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘கடிதத்தில் உள்ளது மாணவியின் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய, தடயவியல் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்து உள்ளோம். மேலும் பேப்பர் குறிப்பில் உள்ள நபர்கள் யார், எதற்காக இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.
பொதுவாக 'போக்சோ' வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது. வழக்கு போட முடிவுஆனால், கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர், மாணவியின் புகைப்படம், பெயர் போன்ற தகவல்களை வெளியிட்டனர். அதேபோன்று 'ஆன்லைன்' உட்பட சில மீடியாக்களும் மாணவியின் பெயர், புகைப்படத்தை வெளியிட்டன. இதனால், இவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்ய, கோவை மாநகர போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக’ தெரிவிக்கின்றனர்.