கேரளாவின் வாளையார் சோதனைச் சாவடியில், சேலத்தில் இருந்து கொச்சிக்கு காரில் பணம் கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத ரூபாய் 1.18 கோடி ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர், காலத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்தப் பகுதியில் தமிழக எல்லையில் கோவை அருகே உள்ளது. இந்த வழியாக போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க கேரளா போலீசார், தமிழக போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாளையார் காவல் ஆய்வாளர் ராஜுவ், உதவிய ஆய்வாளர் பிரம்மோத் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சேலத்தில் இருந்து கொச்சி நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் பின்புறம் இருக்கைக்கு அடியில் கட்டு, கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து காரில் வந்த தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சவான் ரூபேஷ், அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் என்பதும், சேலத்தில் வசித்து வரும் அவர்கள் அங்கு இருந்து கொச்சிக்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
காரில் கடத்தப்பட்ட பணத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல் துறையினர் எண்ணிய போது அதில் ரூபாய் ஒரு கோடியே 18 லட்சம் இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


