- Home
- Tamil Nadu News
- கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.710 கோடி.. இந்த ஆண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.710 கோடி.. இந்த ஆண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்
TASMAC: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை விட ரூ.140 கோடி அதிகமாகும். இந்த சாதனை விற்பனையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 3,240 டாஸ்மாக் கடைகளில் பார்கள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் விற்பனை கூடுதலாக இருக்கும். மேலும், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை
கடந்த புத்தாண்டு தினத்தன்று டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் ரூ.400 கோடிக்கு மது விற்பனையாகின. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை பதிவாகியுள்ளது.
மது விற்பனை ரூ.850
இந்நிலையில் பொங்கல் திருநாளுக்கு மது வணிகம் ரூ.850 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் குடும்பங்களை சீரழிப்பதில் மட்டுமே திமுக மீண்டும், மீண்டும் சாதனை என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 14, 15, 17, 18 ஆகிய நாள்களில் மொத்தம் ரூ.850 கோடிக்கு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டை விட அதிகம்
ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் அருவருக்கத்தக்க சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது, ரூ.710 கோடிக்கு மது வணிகம் செய்யப்பட்டிருந்தது.
மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பு
ஆனால், இப்போது ரூ.140 கோடிக்கு அதிக மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட 20% அதிகம் ஆகும். மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பதென்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல. சமூகச் சீரழிவின் அடையாளமாகவே இதை பார்க்க முடியும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான். அதை பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் சாத்தியமாக்கும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

