கோவையில் இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று காலை லாரி மோதியதில் பெண் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்தார். 

தலை நசுங்கி உயிரிழந்த பெண்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று காலை பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் அங்கு உள்ள சிக்னல் அருகில் கறிக்கோழி கடை அருகில் சென்ற போது அந்த வழியாக சென்ற லாரி உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நிலை தடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்துள்ளார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹெல்மெட்டுடன் சேர்ந்து அவரது தலை நசுங்கி மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் யார்?

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும் லாரி ஒன்று சென்று கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே அந்த லாரியை மடக்கி பிடித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர்.

ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்த ஜாஸ்மின் ரூத்

அப்போது அவர் பையில் இருந்த ஆதார் அடையாள அட்டை மூலம் அவரது பெயர் ஜாஸ்மின் ரூத் (39) வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரது மனைவி என தெரியவந்தது. ஜாஸ்மின் ரூத் வடவள்ளியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தான் இன்று காலை வேலைக்கு செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

குழப்பம் அடைந்த போலீஸ்

இதற்கு இடையே பொதுமக்கள் சிறை பிடித்த டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் கரூரை சேர்ந்த பெரியசாமி என தெரியவந்தது. அவர் விபத்தை நான் ஏற்படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தவறுதலாக ரோட்டில் சென்ற தனது வாகனத்தை சிறை பிடித்து விட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனவே ஜாஸ்மின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி எது என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.