யுஜிசி-யை கலைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் - கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்...
திருவாரூர்
யுஜிசி-யை கலைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களை நிறுவி பல கோடி ரூபாய் செலவில் உயர்கல்வியை மேம்படுத்தி வருகிறது யு.ஜி.சி. எனப்படும் மத்திய பல்கலைக்கழக மானியக் குழு.
மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உயர் கல்வியை விற்கும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்க முயற்சி செய்கிறது என்று மாணவர்கள் அமைப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மானியக் குழுவை கலைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த முயற்சியை கைவிடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கக் கிளைத் தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் நகர செயலாளர் சுர்ஜித், ஒன்றிய செயலாளர் மதன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.