கோவை மாவட்டத்தில் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானை அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்து வாயில் காயம் ஏற்பட்டதா என்று வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிவது இன்று வனத்துறையினரால் கண்டறியப்பட்டது. இதன் காயத்திற்கு சட்டவிரோதமாக காட்டு பன்றியை வேட்டையாடி கொல்ல பயன்படுத்தப்படும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு காரணமாக இருக்கலாம் என வன உயிரின ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இக்கோணத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் இரு யானைகளின் இடையே நடைபெற்ற மோதல் காரணமாகவும் பாகுபலியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பாகுபலி இருந்த இடத்தில் யானைகள் மோதல் ஏற்பட்டதற்கான தடயம் காணப்பட்டதாகவும் வனத்துறையினர் கூறி வருகின்றனர். பாகுபலி யானை தற்போது ஒரு இடத்தில் நில்லாமல் வனப்பகுதிக்குள் வேகமாக நகர்ந்து வனத்துறையினருக்கு வழக்கம் போல் போக்கு காட்டி வருவதால் அதன் காயத்தின் தன்மையை ஆய்வு செய்ய இயலவில்லை. 

இந்தியாவிலேயே தரம் குறைந்த மது தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது - கிருஷ்ணசாமி

இந்நிலையில், அவுட்டுக்காய் காரணமாக பாகுபலி காயமடைந்ததாக உறுதி படுத்தப்பட்டால் சந்தேகப்படும் வனப்பகுதியில் நாட்டு வெடிகளை கண்டறிய வனத்துறைக்கு சொந்தமான இரு மோப்ப நாய்கள் சாடிவயல் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. பைரவன், வளவன் என அழைக்கப்படும் இந்த பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் பாகுபலி காயம்பட்டது அவுட்டுக்காயால் தான் என உறுதி செய்யப்பட்டால் வனத்திற்குள் சென்று வேறு எங்கேனும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட உள்ளது. 

விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும் - வானதி சீனிவாசன்

யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் சுகுமார் வந்துள்ள நிலையில் யானைக்கு காயம் சிறிதாக இருந்தால் பலா, அன்னாசி, வாழை போன்ற பழங்களில் மருந்துகள் வைத்து யானைக்கு கொடுக்கப்படும். காயம் பெரிதாக இருந்தால் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகுபலி இருக்குமிடத்தையும் அதன் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய டிரோன் கேமராவை பயன்படுத்தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.