Viral Video: வீட்ல வேற ஒன்னுமே இல்ல போ சாமி; காட்டு யானையை பேசிய வழி அனுப்பிய தோட்ட தொழிலாளி
கோவை அருகே உணவு தேடி வீட்டுக்கு வந்த காட்டு யானையிடம் வீட்டில் ஒன்றுமில்லை திரும்பி போ சாமி எனக் கூறி திருப்பி அனுப்ப முயன்ற செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![forest elephant roaming garden area in coimbatore vel forest elephant roaming garden area in coimbatore vel](https://static-ai.asianetnews.com/images/01hzvc39qjwfkrgv238k97zz4k/mixcollage-08-jun-2024-12-59-pm-1997_363x203xt.jpg)
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வன கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வலம் வரும் காட்டு யானைகள் வேளாண் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விட்டுச் செல்வதை யானைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளை நிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த தோட்டப் பணியாளர்களின் குடியிருப்பை முகாமிட்டன. அப்போது ஒரு காட்டு யானை ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடி அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது.
யானையைப் பார்த்ததும் வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்கள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது தோட்ட பணியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்றொருவர் வீட்டில் ஒன்னும் இல்ல அவ்வளவுதான். போ சாமி என யானையிடம் கூறி திருப்பி அனுப்ப முயன்றார். இந்த செல்போன் வீடியோ காட்சி தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.