சென்னை - கோவை இடையே நாளை முதல் இயங்க இருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''சென்னை - கோவை வந்தேபாரத் ரயிலை (எண்:20643/20644) சனிக்கிழமை (நாளை) மாலை 4 மணிக்கு, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த ரயிலில் ரயில்வே உயர் அதிகாரிகள் உள்பட 400க்கும் அதிகமானவர்கள் பயணிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவைக்கு நாளை இரவு 10 மணிக்கு வரும் இந்த ரயில், 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை புறப்படும். அந்த ரயில் 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58 மணிக்கு சேலம், 9.35 மணிக்கு ஜோலார்பேட்டை, 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றைடையும். 

சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 4.40 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.48 மணிக்கு சேலம், 6.32 மணிக்கு ஈரோடு, 7.13 மணிக்கு திருப்பூர், 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். வாரத்தில் புதன்கிழமை மட்டும் இந்த ரயில் இயங்காது. மற்றபடி வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படும். கோவை- சென்னை இடையே இதன் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்கள்.

நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்

இந்த ரயிலில் 450 ஏசி 2-ம் நிலை இருக்கைகள், 56 முதல் நிலை இருக்கைகள் உள்ளன. 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும். முதல் நிலை இருக்கை கட்டணம் ரூ.2,400. 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,400. இந்த ரயிலில் பயணிக்க விரும்புபவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.